பயணிகளின் கனிவான கவனத்திற்கு - PS RAGAV


நன்றி: PUT CHUTNEY RAJMOHAN
(கற்பனை கலந்த உண்மை கதை. எங்கள் கல்லூரியில் நடந்த சிறுகதை போட்டிக்காக எழுதியது)


பயணிகளின் கனிவான கவனத்திற்கு,
வண்டி எண் 76842 திருச்சியிலிருந்து, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம் வழியாக கடலூர் துறைமுகம் வரை செல்லும் கடலூர் திருச்சி பாசான்ஜர் வண்டி மதியம் 3 மணி 40 நிமிடத்திற்கு 5வது நடைமேடையிலிருந்து புறப்படும்.

தம்பி இந்த ட்டிரயின் அரியலூர்ல நிக்குமா?

ம்ம்ம் ……. நிக்கும் சார், என்றேன்.

வண்டி போயிடிச்சோன்னு பயந்துட்டே வந்தேன்பா.

ஐயா பெரியவரே மணி 3.25 தான் ஆகுது. இன்னும் 15 நிமிஷம் இருக்கு வண்டி புறப்பட, வந்து இங்க உட்காருங்க, என்றார் என் அருகில் இருந்த மற்றொருவர்.

அந்த பெரியவர் எனக்கு நேர் எதிரே உள்ள இருக்கையில் அமர்ந்தார். பாசன்ஜர் வண்டி என்பதால் கூட்டம் அவ்வளவாக இல்லை. மூன்று பேர் அமரும் இருக்கையில் ஒருவர் ஒய்யாரமாக படுத்துக்கொண்டு போகும் அளவுதான் கூட்டம் இருந்தது.

தம்பி நிச்சயம் இந்த வண்டி அரியலூர் ல நிக்கும்தான? நான் ஊருக்கு புதுசு தம்பி, என்று அந்த பெரியவர் வண்டி புறப்படும் வரை வினவிக்கொண்டே இருந்தார்.

எனக்கு கோபம் தலைக்கேறியது. தண்ணீர் பாட்டில் எடுத்து தண்ணீர் குடித்துவிட்டு ஜன்னல் புறமாக தலை சாய்த்துக் கொண்டு கண்களை இருக்கி மூடிக்கொண்டேன். பாவம் என் அருகில் இருந்தவரை பாடாய் படுத்திவிட்டார் அந்தப் பெரியவர்.  தொனதொனவென்று கோபத்தை வெளிப்பபடுத்த முடியாமல் அந்த இடத்தை விட்டு எழுந்து வாசற்படி பக்கம் சென்றேன்.

வண்டி சற்று தாமதமாகவே புறப்பட்டது. மெதுவாக வண்டி நகர, வேகமாக ஒருவர் கையில் ஒரு பையுடன் ஓடி வந்து, சார் கொஞ்சம் வழி விடுங்க ஏறிக்கிறேன் என்றபடி நான் நின்றுக் கொண்டிருந்த படிக்கட்டில் ஏறினார்.

சார்! பாத்து ஏறுங்க சார், என்றேன்.

ரொம்ப தேங்ஸ் தம்பி என்று பெருமூச்சுடன் கூறினார். பார்ப்பதற்கு வாட்ட சாட்டமாக இருப்பார். தினசரி உடற்பயிற்சி செய்வார் போல தெரிந்தது.

தம்பி சீக்கிரம் வர வேண்டியது தானே? நான் 15 நிமிஷத்துக்கு முன்னே வந்துட்டேன்பா என்று சிரித்துக்கொண்டே வந்தவரிடம் அந்த பெரியவர் பெருமை பீத்திக்கொண்டார். 

போச்சிடா! புதுசா ஒருத்தர் சிக்கிட்டார் என்று மனதிற்குள்ளே நினைத்துக்கொண்டு வெளியே வேடிக்கை பாத்துக்கிட்டே மணியை பார்த்தேன், 3.45.

”காவிரி விவகாரத்தில் கர்நாடகா அரசு பிடிவாதம், வரண்டு போகுமா தமிழகம்?”  என்று நாளிதழில் உள்ள முகப்பு செய்தியை அனைவருக்கும் கேட்கும்படி வாசித்தார் அந்த இளைஞர். தம்பி, தமிழ்நாட்டுல விவசாயி தவிர யாருமே போராட மாட்றாங்க, எப்படிப்பா நம்ம எதிர்ப்ப தெரிவிக்க முடியும், சினிமாகாரங்க நம்மக்கிட்டே கோடி கோடியா சம்பாதிக்கிறாங்க. ஒரு பயக்கூட கர்நாடகாவுக்கு எதிராவோ, இல்ல நமக்கு ஆதரவாவோ 
குரல் கொடுக்க மாட்றாங்களே தம்பி, திடீரென்று பெரியவர் ஆத்திரத்துடன் உரைத்தார்.

அந்த பெரியவர் பேசியது சற்று யோசிக்கும் விதமாக தான் இருந்தது. பிறகு அது ஒரு விவாதமாகவே முற்றியது. அந்த விவாதத்தை பார்த்துக்கொண்டே இருந்தேன். 

விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது. அதிலும் அந்த இளைஞர் கூறியது அங்கு இருந்த அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது.

கர்நாடகா தமிழகத்திற்கு தண்ணீர் தருவதில் மட்டும் ஏன் இவ்ளோ வெறுப்பு, வன்மம், கோபம்? ஒரு நைல் நதியை 3 நாடுகள் பங்கீட்டுக் கொள்கின்றன. எந்த பிரச்சனையும் வர்ல, இஸ்ரேல் பாலஸ்தீனம் இரண்டு எதிரி நாடுகள் ஒரு நதியை பங்கீட்டுக்கொள்வதில் எந்த பிரச்சனையும் வர்ல. இந்தியா வாங்காளதேசம் உடன் ஒரு நதியை பங்கீட்டுகொள்வதில் எந்த பிரச்சனையும் வர்ல. இவ்வளவு ஏன்? நம்ம எதிரி நாடுன்னு சொல்லப்படுகிற பாக்கிஸ்தானோடு இந்தியா ஒரு நதியை பங்கீட்டு கொள்வதில் கூட எந்த பிரச்சனையும், சிக்கலும் வர்ல.
ஆனா கர்நாடகா தமிழகம், ஒரே நாட்டின் 2 குழந்தைகள், இரு மாநிலங்கள் ஒரு காவிரியை பகிhந்துகொள்வதில், பங்கீடு செய்வதில் 114 வருசமா பிரச்சனை. 27 வருசமா சுப்ரீம் கோர்ட் சொன்னது, 17 வருசமா காவிரி நடுவர் மன்றம் சொன்னது, 528 ஸிட்டிங்கிஸ்ல விஞ்ஞானிகள் சொன்னது, வேளாண் அதிகாரி சொன்னது, விவசாயிகள் சொன்னது, வாஜ்பாய் உள்ளிட்ட முன்னாள் பிரதமர் சொன்னது, இத்தனபேர் சொன்னதுக்கப்பறம் கூடவும் தண்ணீர் தர மறுக்கிறது. பஸ்ஸ கொளுத்துறது, போராட்டம் பண்றது. துமிழனைப் பார்த்தா அடிக்கிறது இதெல்லாம் எந்த விதத்தில நியாயம், மனிதாபிமானம் இல்லாம போயிடுச்சே, என்றார் அந்த இளைஞர்.

அனைவரும் அவர் கூறியதைக் கேட்டு திகைத்து போயினர். இவ்ளோ விரிவா காவிரி பத்தி பேசுகிறாரே. ஒருவேளை அரசியல்வாதியாய் இருப்பாரோ? என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் அவர் பார்க்க அப்படித் தெரியவில்லை.

மணி 4.50 இருக்கும். ட்ரெயின் புள்ளம்பாடி இரயில் நிலையத்தில் 15 நிமிடம் ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்க்கு வழிவிடுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டது.

டீ, டீ, சார், டீ சார் என்றபடி சுமார் 14 வயது மிக்க ஒரு சிறுவன் டீ விற்றுக் கொண்டு என்னை நோக்கி வந்தான். அண்ணே டீ வேணுமா அண்ணே? 5 ரூபாய் தான் அண்ணே என்றான். 

அவன் ஆடையை பார்த்ததுமே உணர முடிந்தது அவன் பள்ளியில் பயிலும் மாணவன் என்று.

தம்பி! ஸ்கூல் போகாம டீ வித்துட்டு இருக்கியே! ஸ்கூல் போகலயா? என்றேன். அண்ணே ஸ்கூல் இப்பதான் விட்டாங்க, தினமும் ஸ்கூல் முடிச்சிட்டு டீ விக்க வந்துடுவேன். திரும்ப 7 மணிக்கு மேல வீட்டுக்கு போயிடுவேன். பரிதாபமாய் கூறினான். அதைக் கேட்டவுடன் மனதில் சிறிய கலக்கத்துடன் கண்களில் கண்ணீரும் கலங்கியது. பத்து ரூபாய் எடுத்து அவனிடம் நீட்டினேன். ஒரு டீ கொடு தம்பி என்றேன். டீ-வுடன் மீதி 5 ரூபாய் கொடுத்தான். 

பரவால தம்பி நீயே வச்சிக்கோ என்றேன்.

இல்ல அண்ணே, வேணும்னா இன்னொரு டீ வாங்கிக்கோங்க, ஆனா இந்த அன்பளிப்பு எனக்கு வேணாம் அண்ணே. என்ன பாத்து யாரும் பரிதாபபடக் கூடாதுன்னு நினைக்கிறேன் நான். தயவு செய்து நீங்களே வச்சிக்கோங்க அண்ணே என்று என்னிடமே 5 ரூபாய் கொடுத்தான். அவனை சற்று உற்று நோக்கினேன்.

என்ன அண்ணே அப்படி பாக்குறிங்க?

ஒன்னுமில்ல தம்பி நல்லா படி. நீ நல்லா வருவ தம்பி என்று கூறினேன்.
தம்பி அரியலூர் எப்ப வரும், அரியலூர்ல வண்டி நிக்கும்ல? மறுபடியும் அந்த பெரியவர் ஆரம்பித்தார். ஐயா கண்டிப்பா அரியலூர் வந்ததும் சொல்றேன். நானும் அங்க தான் இறங்குவேன் என்றார் அந்த இளைஞர்.

 ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் வெகுநேரம் கழித்தே எங்களை கடந்து சென்றது. சுரியாக 5 நிமிடம் கழித்து, எங்கள் ரெயில் புறப்பட்டது.

ஏன் சார் தமிழ்நாட்டுல நிலத்தடி நீரே இல்லையா? நாம ஏன் அவங்ககிட்ட தண்ணீர் கேக்கணும்? எங்கிருந்தோ வந்த குரல்.

ஏங்க, கடந்த நூறு வருஷத்துல கர்நாடகா காவிரி என்ற நதியை சுற்றி 400 குளம், குட்டை, கண்மாய், நீர் தேக்கங்களை உருவாக்கிருக்காங்க. ஆனா நாம காவிரியை சுத்தி என்னங்க தூறு வாறுனோம்?

அதான் ஆத்துல தினம் தூறு வாறிட்டே இருக்காங்களே!, மறுபடியும் எங்கிருந்தோ வந்த குரல்.

யாருப்பா அது? காவிரியை சுத்தி என்ன பண்ணிருக்கோம் தெரியுமா? தொழிற்சாலைகள், cold drinks கம்பெனி, corporate கம்பெனி,… ஒரு நதிக்கு நீர் என்பது மேலாடை, மணல் என்பது அதன் உள்ளாடை, மேலாடைய உருவி கார்ப்பரேட்-க்கு வித்தாச்சி. அதனோட உள்ளாடையை உருவி லாரில கடத்தி மணல் கொள்ளையில ஈடுபட்டுகிட்டு இருக்கு இந்த நாடு.

சார்,  இருக்குற மணல் எல்லாம் கொள்ள அடிச்சி என்னைக்கோ வரப்போற, கண்ணுக்கே தெரியாத ஒரு தலைமுறைக்கு தண்ணீருக்கு ஏங்க போற தலைமுறைக்கு இன்னைக்கு கோடி கோடியாக கொட்டி மெடிக்கல் காலேஜ், இன்ஜினியரிங் காலேஜ், அந்த கம்பெனி  இந்த கம்பெனி-ன்னு கட்டி வைக்கிறோம். அப்ப தண்ணீருக்கு?
இப்ப என் பாட்டன் ஆத்துல குளிச்சான், என் அப்பன் குளத்துல குளிச்சான், இப்ப நான் குழாய்ல குளிக்கிறேன், என் பையன் குளிக்கவே மாட்டான், குளிக்கிகறதுக்கு ஒரு மாத்திரையை கண்டுபிடிச்சிடுவான், என் பேரன், குடிக்க தண்ணீருக்கு என்ன பண்ணுவான்?
அவர் கேட்ட ஒவ்வொரு கேள்வியும் என்னை ஆழ்ந்த சிந்தனைக்கு கொண்டு சென்றது.
கூவம் நதியில் குளித்து முடித்துவிட்டு முருகன் கோவிலில் வழிபாடு முடித்து சென்றார் பச்சையப்ப முதலியார். இப்ப 60 வருஷத்திற்கு முன்னாடி. ஆனா தற்போது கூவம் நதியில குளிக்க வேணாம், பக்கத்துல நிக்க முடியுமா? சார் சொன்னா சொல்லிட்டே போலாம் சார். வயிறு எரியுது சார். கண்ணீர் மல்க அந்த இளைஞர் உரைத்தார்.

அரியலூர் இரயில் நிலையும் வருவது போல தெரிந்தது. ஐயா பெரியவரே எழுந்துருங்க அரியலூர் வரப்போவுது என்று தானும் எழுந்து படி அருகே வந்து நின்றார் அந்த இளைஞர். அவரிடம் இன்னும் பல விஷயங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் என்னுள் இருந்தது, இருந்தாலும் அவரிடம் தைரியமாய் போய்பேச முடியவில்லை. ஏதோ ஒன்று தடுத்தது.

ஆனால் அவர் உரைத்த அனைத்தும் என் நெஞ்சில் ஆழமாய் பதிந்தது. அரியலூர் இரயில் நிலையத்தில் வண்டி நின்றது. அவரும் அந்த பெரியவரும் கீழே இறங்கினார்கள். நான் என் இருக்கையில் சென்று அமர்ந்தேன். அடுத்த 2 நிமிடத்தில் இரயில் மெதுவாக புறப்பட்டது. மறுபடியும் அந்த இளைஞரை பார்க்க முடியாதா என்ற எண்ணம் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. எனினும் அவரை ஒருமுறை பார்க்க என் மனம் துடித்தது. வாசற்படி வழியாக எட்டிப் பார்த்தேன். இரயில் புறப்பட்டதால் பார்க்க முடியவில்லை. அவரும் கூட்டத்தில் கலந்துவிட்டார்.



                           ப சு இராகவேந்திரன்
              புதிய தலைமுறை

Comments

Popular posts from this blog

டாக்டர் - ஒரே நாளில் ரூ.8.50 கோடி வசூல்! வெற்றிக் கொண்டாட்டத்தில் படக்குழு

ஓடிடியில் ஆங்கராகும் மீம்ஸ் நாயகன் வைகைப்புயல் வடிவேலு

தலைவி பட சர்ச்சை - பதில் சொல்வாரா தலைவா இயக்குநர்?